Friday, July 19, 2013

முதலீடல்ல, முதலுக்கே மோசம்!

தினமணி தலையங்கம் 
          இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பது உலகறிந்த ஒன்றாகிவிட்டது. "எதைத் தின்றால் பித்தம் தெளியும்' என்பதுதான் இந்திய அரசின் இன்றைய நிலை. பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள அரசு கண்டுபிடித்திருக்கும் ஒரே வழி அன்னிய முதலீட்டுக்குக் கதவைத் திறந்துவைப்பது என்பது. உடனடியாக பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பித்துக்கொள்ள அன்னிய முதலீட்டுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது என்பது வலியப்போய் பேராபத்தை விலைக்கு வாங்குவது என்பது தெரிந்தே பொருளாதார மேதைகள் என்று கருதப்படும் ஆட்சியாளர்கள் செயல்படுவதுதான் விசித்திரமாக இருக்கிறது.
          இந்திய பாதுகாப்பு மற்றும் அலுவலக ரகசியங்களுக்கு மிக இன்றியமையாத துறைகளான தொலைத்தொடர்பு, ராணுவத் தளவாட உற்பத்தி இரண்டிலுமே 100% அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்திருக்கிறது. இனிமேல் அமெரிக்கா போன்ற வல்லரசுகள் இந்தியாவை உளவு பார்க்க அதிக சிரமம் கொள்ளத் தேவையில்லை. 100% அன்னிய நேரடி முதலீட்டைக் கொண்டு வந்து கொட்டப்போகும் நிறுவனங்களை அமெரிக்கா உரிமையுடன் கேட்டு, தகவல்களைப் பெற்றுக்கொள்ளும். 
          தொலைத்தொடர்புத் துறையில் இதுவரை 74% அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டு வருகிறது. இனிமேல் 100% அன்னிய நேரடி முதலீட்டுக்குக் கதவுகளைத் திறந்திருக்கிறார்கள். அளவு உயர்த்தப்பட்ட போதிலும், 49%-க்கு அதிகமான முதலீடுகள் அனைத்தும் வழக்கம்போல, அன்னிய முதலீட்டு மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாகத்தான் வந்து சேரும் என்று சொல்கிறது அரசு. வரப்போவது இந்திய அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் வெளிநாட்டில் சேர்த்து வைத்திருக்கின்ற கருப்புப் பணமா அல்லது உண்மையாகவே முதலீடா என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
          இதுவரை இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வந்த வோடபோன் போன்ற நிறுவனங்கள் இனி 100% முதலீட்டுடன் நேரடியாக களத்தில் இறங்கும். தற்போது இவர்களுடன் கூட்டுத்தொழில் செய்யும் இந்திய நிறுவனங்கள் தனித்து விடப்படும். அவர்களால் இந்த வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டியிடவே முடியாது. நட்டத்தில் முடிந்து போவார்கள். ரிலையன்ஸ், டாடா போன்ற நிறுவனங்களாக இருந்தாலும் இதுதான் நிஜமாக இருக்கப் போகிறது.
          தனியார் நிறுவனங்களின் பிரச்னை ஒருபுறம் இருக்கட்டும். பிஎஸ்என்எல் போன்ற அரசு நிறுவனங்களின் கதி என்னவாக இருக்கும் என்பதுதான் நம்மை மேலும் திடுக்கிட வைக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்புவரை லாபம் காட்டிய பிஎஸ்என்எல் நிறுவனம், நட்டத்தை காட்டத் தொடங்கியிருப்பது குறித்து அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை.  தணிக்கை நிறைவுபெறாத கணக்கின்படி பிஎஸ்என்எல் 2008-09-ஆம் ஆண்டில் ரூ. 525 கோடி லாபம் காட்டியது. ஆனால் 2009-10 முதல் 2012-13 நிதியாண்டு வரையிலும் முறையே ரூ.1,823 கோடி, ரூ.6,384 கோடி, ரூ.8,851 கோடி, ரூ.8,198 கோடி நட்டம் காட்டப்படுகிறது.
          தொலைத்தொடர்புத் துறையில் தற்போது இந்திய நிறுவனங்களுடன் கூட்டுத்தொழிலில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்தும் லாபம் ஈட்டுகின்றன. மேலும் லாபம் ஈட்டவும் அரசு கதவுகளைத் திறக்கிறது. ஆனால் இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனம் மட்டும் நட்டத்தில் இயங்குகிறதே அதற்கு என்ன காரணம்? உண்மையாகவே நட்டமா அல்லது மிக மோசமாக நட்டத்தில் ஈடுபடுவதால் இந்த நிறுவனத்தை தனியாருக்கு மொத்தமாகத் தாரை வார்த்துவிடலாம் என்பதுதான் இன்றைய ஆட்சியாளர்களின் திட்டமா? ஏலம் கேட்கும் சக்தி வாய்ந்த பன்னாட்டு நிறுவனத்துக்கு - மொத்தமாக விற்றுவிடத்தான் திட்டமா?
          ஒரு வளரும் நாடு, வெளிநாடுகளுடன் கூட்டுத்தொழில் செய்யும் உள்நாட்டு நிறுவன முதலீட்டு அளவை உயர்த்துவதுதான் சரியாக இருக்குமே தவிர, வெளிநாட்டு முதலீட்டை உயர்த்தி, முழுமையாக களம் இறங்க அனுமதித்துவிட்டு, உள்நாட்டு நிறுவனங்கள் போட்டிபோட முடியாத நிலையை ஏற்படுத்துவது உள்நோக்கத்துடன் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவி செய்வதாகத் தோன்றுகிறது. 100% அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் இந்தியாவுக்கு ரூ.10,000 கோடி வந்து சேரும் என்பது மத்திய அரசின் விளக்கம். அதன் மூலம் தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளலாம் என்பதுதான் அரசின் உண்மையான நோக்கம்.
          ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியைப் பொருத்தவரை அன்னிய நேரடி முதலீடு 26%க்குக் குறைவாக இருக்கும்வரை "அன்னிய முதலீடு மேம்பாட்டுக் கழக'த்தின் மூலமாகத்தான் இந்தியாவுக்கு வந்து சேரும். அதற்கும் கூடுதலாக அன்னிய நேரடி முதலீடு இருக்குமெனில், நாட்டின் பாதுகாப்பு கருதி, மத்திய அமைச்சரவை நேரடியாக முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவத் தளவாட உற்பத்தியில் 100% முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் இந்தியாவுக்குப் புதிய முதலீடுகள், புதிய போர்த் தொழில்நுட்பக் கருவிகள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
          இதனால் வெளிநாடுகளுடன் ஆயுத பேரம் செய்ய வேண்டிய தேவை இருக்காது என்பதும் அவர்களது விளக்கம். வெளிநாட்டிலிருந்து ஆயுதங்களை வாங்குவதற்குப் பதிலாக வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவிலேயே ஆயுதங்களைத் தயாரிக்கச் சொல்லி ராணுவத்திற்கு அந்த ஆயுதங்களை வாங்கிக் கொள்வது என்பது அரசின் நோக்கம். இதைவிட ஜப்பான் செய்திருப்பதைப்போல இந்தியாவின் பாதுகாப்பை அமெரிக்காவுக்கோ அல்லது வேறு ஏதாவது வல்லரசுக்கோ கொடுத்துவிடலாமே என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது. ஒட்டுமொத்தமாக இந்தியாவை இன்னும் விலைபேசவில்லையே என்கிற அளவில் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்!                                                                                                                                           
நன்றி :-தினமணி

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...